பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை கொலைசெய்து சடலத்துக்கு தீ மூட்டியவருக்கு மறியல் நீடிப்பு
பெண் பொலிஸ் கான்ஸ்டபிளைக் கொலை செய்து, சடலத்தைத் தீயிட்டுக் கொளுத்தினார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட நபரை, எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியளில் வைக்குமாறு பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்ற நீதிபதி நயந்த சமரதுங்க உத்தரவிட்டார்.
பாணந்துறை குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் சந்திமா பிரியதர்சினி சந்திரசேகரன் என்பவரே (வயது – 26) கடந்த முதலாம் திகதி கொல்லப்பட்டார்.
இதையடுத்து, ஊவா கட்டவளை பெருந்தோட்ட கள மேற்பார்வையாளர் துசித்த நந்தன பெரேரா (வயது – 28) சந்தேகத்தின் பேரில் ஹாலி-எலைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இவர் பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்செய்யப்பட்டபோது, நீதிபதி அவரைத் தொடர்ந்தும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கொலைக்குரிய தடயப் பொருட்களான இரு கத்திகள், உடைகள், கையடக்கத் தொலைபேசிகள், ஆவணங்கள் உள்ளிட்ட 8 தடயப் பொருட்கள் குறித்து பூரண புலன் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கும்படியும் ஹாலி-எலைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.