பலாலி விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்கோம்! – அடித்துக் கூறுகின்றது அரசு

பலாலி விமான நிலையமானது இந்தியாவுக்கோ அல்லது வேறு எந்த நாட்டுக்கோ வழங்கப்படாது என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை வானூர்தி மூலம் ஏற்றிச் செல்லல் சட்டமூலம் மீதான விவாதம் நடைபெற்றது. இதன்போது, பலாலி விமான நிலையம் தொடர்பில் விமல் வீரவன்ஸ எம்.பியால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

“பாலாலி விமான நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நீங்கள் (விமல்) கூறுவது அப்பட்டமான பொய்யாகும். அவ்வாறு எந்தவொரு முடிவையும் அரசு எடுக்கவில்லை. துறைசார் அமைச்சர் என்ற வகையில் பொறுப்புடனேயே இதைக் கூறுகின்றேன்.

சுற்றுலாத்துறை அமைச்சுடன் இணைந்து பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வோம். உள்நாட்டு விமான சேவையைப் பலப்படுத்தவேண்டியுள்ளது. பலாலியில் மட்டுமல்ல கண்டி திகன உட்பட ஏனைய பகுதிகளிலும் விஸ்தரிப்பு நடவடிக்கை இடம்பெறும்.

பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணியைக்கூட இந்தியாவிடம் கையளிக்க நாம் விரும்பவில்லை” என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இதன்போது மற்றுமொரு கேள்வியை எழுப்பிய விமல் வீரவன்ஸ எம்.பி., நல்லாட்சியின் ஆயுள் முடிவடைவதற்குள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டால் உங்கள் அமைச்சுப் பதவியை துறப்பீர்களா?” என்று கேட்டார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், “கற்பனை அடிப்படையிலும் குறுகிய அரசியல் நோக்கத்துடனும் எழுப்பப்படும் கேள்விக்குப் பதிலளிக்க முடியாது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *