யாழில் மீளுயிர்ப்புப் பெற்றது ‘பொங்கு தமிழ்’ நினைவுத்தூபி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த பொங்கு தமிழ் பிரகடன நினைவுப் பலகை தூபியாகப் புனரமைக்கப்பட்டு இன்று திங்கட்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் அமைக்கப்பட்ட பொங்கு தமிழ்ப் பிரகடனத் தூபியைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஆர். விக்னேஸ்வரன் திரைநீக்கம் செய்து வைத்தார்.

2001ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி தமிழ் மக்களின் அபிலாஷைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் எனப் பிரகடனப்படுத்தி சர்வதேச சமூகத்தைத் தமிழர் தேசத்தின்பால் திரும்பிப் பார்க்கும் வகையில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் நடத்தப்பட்ட பொங்குதமிழ் நிகழ்வின் நினைவாக யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் பொங்குதமிழ்ப் பிரகடனம் அமைக்கப்பட்டிருந்தது. அந்தப் பலகையை அழகுறத் தூபியாகப் புனரமைக்கும் பணியைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேற்கொண்டிருந்தது.

புனரமைக்கப்பட்ட தூபியே இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஷ்ணமேனன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் மங்கள விளக்கேற்றி தூபியைத் திறந்து வைத்தார்.

நிகழ்வில் பல்கலைக்கழகப் பதிவாளர், விரிவுரையாளர்கள், பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *