முல்லைத்தீவில் மீண்டும் வெடித்தது போராட்டம்!

முல்லைத்தீவில் சுருக்குவலை மீன்பிடித் தொழிலுக்குத் தற்காலிக அனுமதி வழங்கப்பட்டவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மீனவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று திங்கட்கிழமை காலை 9 மணியளவில் முல்லைத்தீவுக் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்துக்கு எதிரே அமைதியான போராட்டம் ஒன்றை மீனவர்கள் ஆரம்பித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கறுப்புத் துணியால் வாயை மூடிக் கட்டியிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரியை சந்தித்து மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.

“அமைச்சர் வாக்கு பொய்யா?”, “எம்மை ஏமாற்றிவிட்டார்”, “இலஞ்சம் வாங்கி எம்மை அளிக்காதே!”, “தடை செய்! தடை செய்!!”, “சட்டவிரோத தொழிலை முற்றாகத் தடை செய்!”, “கடற்றொழில் அமைச்சரே தங்களது வாக்குறுதி இதுதானா?”, “சுருக்குவலை அனுமதி முல்லைத்தீவு மீனவர்கள் பட்டினிக்கான அனுமதி” உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு ஊர்வலமாகச் சென்ற மீனவர்கள் சட்டவிரோத கடற்தொழிலைத் தடை செய்யக்கோரி மாவட்ட செயலகத்துக்கு முன்பாகவும் அமைதியான முறையில் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜாவிடம் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் ஆகியோருக்கான மகஜர்கள் கையளிக்கப்பட்டன.

மகஜரைப் பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா, மீனவர் பிரதிநிதிகளை நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மீன்பிடி அமைச்சர் ஆகியோரைச் சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும், சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்து இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி மக்களுக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தார்.

அதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரைச் சந்தித்துக் கலந்துரையாடினர். பின்னர் மாவட்ட அரச அதிபரிடமும் மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.

முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதக் கடற்தொழிலை தடை செய்யக் கோரி கடந்த மாதம் 2ஆம் திகதி மீனவர்களால் மிகப்பெரிய கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. தொடர்ச்சியாகப் பத்து நாட்கள் போராட்டத்தின் பின்னர் போராட்டக்காரர்களைச் சந்தித்த மீன்பிடி அமைச்சர், சட்டவிரோத கடற்தொழிலுக்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், சுருக்குவலைத் தொழில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சுருக்குவலை மீன்பிடித் தொழிலுக்கான அனுமதி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது எனவும் மீனவர்கள் குற்றம்சாட்டினார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *