பாரிய மாற்றங்களுடன் வரும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்! – அமைச்சரவை அனுமதி
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு மாற்றீடாகக் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டிருக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் நகல் வடிவத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
அந்தச் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைவிட பல விட யங்களில் மேன்மையான அம்சங்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.
இந்தச் சட்டத்தின்படி –
* இதன் கீழ் கைதுசெய்யப்படுவோர் 48 மணி நேரத்துக்குள் நீதிவான் முன்னால் நிறுத்தப்பட வேண்டும்.
* தடுப்புக் காலம் உத்தரவு ஆகக் கூடியது எட்டு வாரங்களுக்கு மட்டுமே வழங்கலாம்.
* இரண்டு வாரத்தின் பின்னர் தடுப்புக் காவலை நிராகரிக்க நீதிவானுக்கு அதிகாரம் உண்டு.
* குற்றவியல் விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படாமல் தாமதிக்கப்பட்டு இழுபடுமானால் கைதுசெய்யப்பட்டு ஆறு மாதங்களின் பின்னர் பிணை பெறும் உரிமை சந்தேகநபர் தரப்புக்கு உண்டு.
* நீதிவான் சந்தேக நபரை தனியாகச் சந்தித்து அவரின் நலனைக் கவனிப்பதோடு, சந்தேக நபர் ஏதேனும் முறையீடு செய்வாராயின் அவற்றைப் பதிவு செய்யவும் வேண்டும்.
* நீதிவான் தான் விரும்பும் சமயத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்குள் முன்னறிவித்தல் இன்றி நுழைந்து, அந்த இடத்தைப் பரிசீலித்து, அது தொடர்பான பதிவுகளை ஆராய்ந்து, சந்தேகநபர்களுடன் உரையாடி தேவையான நடவடிக்கை எடுக்க முடியும்.
– என்று தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதிகளைக் கேட்டுக் கேள்வியின்றி தடுப்புக் காவல் உத்தரவை நீடிப்பதன் மூலம் உரிய விசாரணையின்றியே 18 மாத காலம் வரையும் தடுத்து வைத்திருக்கவும் –
வழக்கு விசாரணையின்றி விளக்கமறியலின் கீழ் எத்தனை வருடங்களும் தடுத்து வைத்திருக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.