மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம்!
குறுகிய கால புனர்வாழ்வு வழங்கி விடுதலை செய்யுமாறு கோரி தமிழ் அரசியல் கைதிகள் எட்டுப் பேர் அநுராதபுரம் சிறைச்சாலையில் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளான, ம.சுலக்ஷன், இ.திருவருள், சூ.ஜெயச்சந்திரன், இரா.தபோரூபன், சி.தில்லைராஜ், இ.ஜெகன், சி.சிவசீலன், த.நிமலன் ஆகியோரே கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நல்லாட்சி அரசு அமையப் பெற்ற பின்னர், 5 ஆவது தடவையாகவும் அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
ஒவ்வொரு தடவையும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டு அவர்களது போராட்டம் நிறுத்தப்படுவது வழமை. வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையினாலேயே மீளவும் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.