பெரும் பரபரப்புக்கு மத்தியில் கூடுகின்றது நாடாளுமன்றம்!
செப்டெம்பர் மாதத்துக்குரிய இரண்டாம் வார நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை (18) ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் 21ஆம் திகதிவரை நடைபெறும் சபை அமர்வுகளில் முக்கிய சில சட்டமூலங்கள் நிறைவேற்றப்படும் என்பதுடன், சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைகளும் முன்வைக்கப்படவுள்ளன.
நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல் குறித்து ஆராய்வதற்காக நாளை அல்லது நாளைமறுதினம் காலை கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறும். இதன்போதே விவாதத்துக்கு எடுக்கப்படவேண்டிய விடயங்கள் சம்பந்தமாக இறுதி முடிவெடுக்கப்படும்.
அதேவேளை, ஆளுங்கட்சி மற்றும் எதிரணி ஆகியவற்றின் நாடாளுமன்றக்குழுக் கூட்டங்களும் இவ்விரு தினங்களில் கூட்டப்படவுள்ளன.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்வைக்கப்படவுள்ள புதிய முன்மொழிவு, ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பின்போது ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட கருத்துகள், படையினருக்கு எதிரான குற்றச்சாட்டு உட்பட மேலும் சில விடயங்களால் கொழும்பு அரசியல் பெரும் பரபரப்பாகவே இருக்கின்றது. இந்நிலையிலேயே நாடாளுமன்றமும் செவ்வாயன்று கூடுகின்றது.