முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றம் இடம்பெறவேயில்லை! – அடித்துக் கூறுகின்றார் மைத்திரி
மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றம் இடம்பெறவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடகப் பிரதானிகளுடன் ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“தமது பகுதியில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுகின்றனர் எனக் குறிப்பிட்டு – அதற்கு எதிராக முல்லைத்தீவில் அண்மையில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. அதில் அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் போல் அங்கு எதுவுமே நடக்கவில்லை. சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்படவில்லை. இனி உருவாக்கப்படப் போவதுமில்லை.
மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் ஆக்கிரமிப்பு இடம்பெறுகின்றது என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நான் முற்றாக நிராகரிக்கின்றேன்.
அதேவேளை, இலங்கையில் யார் வேண்டுமானாலும் எப்பகுதியிலும் வாழலாம். அதற்குரிய உரிமை அவர்களுக்கு இருக்கின்றது. ஆனாலும், போராட்டத்தின்போது தெரிவிக்கப்பட்ட கருத்துகள் போல் அரசு எதையும் அங்கு செய்யவில்லை” – என்றார்.