கொழும்பு அரசியலில் பரபரப்பு! – பங்காளித் தலைவர்களுடன் மஹிந்த முக்கிய பேச்சு

பொது எதிரணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சித் தலைவர்களுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த வாரம் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.

செப்டெம்பர் மாதத்துக்குரிய இரண்டாம் வார நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதற்கு முதல் நாள் பொது எதிரணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

அந்தச் சந்திப்பு முடிவடைந்த பின்னரே அன்றிரவு அல்லது மறுநாள் காலை பொது எதிரணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை மஹிந்த சந்தித்துப் பேசவுள்ளார்.

நல்லாட்சி அரசுக்கு எதிராக பொது எதிரணியால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் எதிர்ப்பார்க்கப்பட்டளவு வெற்றியளிக்காததால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக இதன்போது ஆழமாக ஆராயப்படவுள்ளது என அறியமுடிகின்றது.

அதேவேளை, தனது இந்திய விஜயம் சம்பந்தமாகவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு தொடர்பாகவும் மஹிந்த இதன்போது விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில, எஸ்.பி. திஸாநாயக்க ஆகியோரே பங்காளிக் கட்சித் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *