இந்தியா கைவிடாதென்று நம்பியுள்ளனர் தமிழர்கள்! – மோடியிடம் எடுத்துரைத்தார் சம்பந்தன்

“வடக்கு – கிழக்கு மக்கள் இந்தியாவை நம்புகின்றார்கள். நீங்கள் எங்களைக் கைவிட மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.”
 
– இவ்வாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எடுத்துரைத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்.

 இலங்கையில் இருந்து இந்தியா சென்றுள்ள அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழு நேற்று இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்தது. இதன்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.
 
அவர் மோடியிடம் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
 
“போரால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கை அபிவிருத்தி செய்வதில் இந்தியா பெரும் உதவிகளை வழங்கி வருகின்றது. அதற்கு நன்றிகளைத் தெரிவிக்கிறோம். அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியா அதிக அக்கறை செலுத்த வேண்டும். இலங்கை அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.
 
புதிய அரசமைப்பில் நிரந்தர அரசியல் தீர்வையே நாம் எதிர்பார்க்கின்றோம். அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுகளுடன் அந்தத் தீர்வு அமைய வேண்டும்.
 
இலங்கையின் தற்போதைய ஆட்சியில் நாம் எதிர்பார்த்த விடயங்கள் நடைபெறுகின்ற போதிலும் அவற்றின் வேகம் போதாமல் இருக்கின்றது” – என்றார்.
 
இதற்குப் பதிலளித்த இந்தியப் பிரதமர் மோடி,
 
“எம்மை நம்புங்கள். நாம் எப்போதும் உங்களுடைனேயே இருப்போம். இலங்கை அரசு காலதாமதமின்றித் தீர்வைக் காணவேண்டும். இதனைக் கடந்த வருடம் மே மாதம் நான் இலங்கை வந்தபோதும் ஜனாதிபதி, பிரதமரிடம் எடுத்துக் கூறியிருந்தேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *