நல்லாட்சியின் பங்காளிகள் இரவோடிரவாக இரகசியப் பேச்சு!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர், ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் இரகசிய சந்திப்பொன்றை கடந்த வாரம் நடத்தியிருக்கின்றனர் என்று அறியமுடிகின்றது.
கொழும்பிலுள்ள அமைச்சரொருவரின் வீட்டில் – இரவோடிரவாக நடைபெற்ற இந்தச் சந்திப்பில் சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து ஆட்சியமைக்கவுள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே இந்தச் சந்திப்பு அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கூட்டாட்சியைத் தொடர்ந்தும் முன்னெடுக்கவேண்டும் என்றும், இனிவரும் காலப்பகுதியில் முக்கிய அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்றும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின் பின்னர் பேசப்பட்ட விடயங்கள் ஜனாதிபதி மைத்திரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்தே முன்கூட்டியே தேர்தலை நடத்தமாட்டேன் என்றும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி எவரும் ஆட்சியமைக்க முடியாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.