மத்தள விமான நிலையம் இன்று முதல் ஆரம்பம்!
மத்தல சர்வதேச விமான நிலைய விமான போக்குவரத்துக்கள் இன்று முதல் மீள ஆரம்பமாகியுள்ளது. அதற்கமைய முதலாவது சரக்கு விமானம் இன்று மத்தல விமான நிலையத்திலிருந்து, அமெரிக்கா நோக்கி பயணிக்கவுள்ளது. 28 மெட்ரிக் தொன் பொருட்களை ஏற்றிய வண்ணம் இவ்விமானம் பயணிக்கவுள்ளது. இன்று மாலை 07.35 மணியளவில் விமானம் பயணிக்கவுள்ளதாக விமான நிலைய பிரதான முகாமையாளர் உபுல் கலன்சூரிய தெரிவித்துள்ளார். மத்தல விமான நிலையம் வளாகத்திலுள்ள பொருட்களை களஞ்சியப்படுத்தும் தொகுதியை கடந்த அரசாங்கம் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நெற் களஞ்சியசாலையாக மாற்றியமைத்தது. குறித்த வேலைத்திட்டத்தின் காரணமாக பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டமை பின்னர் தெரியவந்தது. இந்நிலையில் கடந்த 5 வருட காலமாக செயலிழந்து காணப்பட்ட மத்தல விமான நிலையம் இன்று முதல் மீள இயங்க ஆரம்பித்துள்ளது.