விஷம் என்பது விஷம்தான்!
மது என்பது உடலைக் கெடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் எப்படி இல்லையோ, அதேபோல் அது கொஞ்சமாகக் குடித்தாலும் அதன் இயல்புத்தன்மையான தீமை மாறாது என்பதையே பல ஆய்வுகளும் வலியுறுத்தி வருகின்றன. புற்றுநோய்க்காகவே பிரத்யேகமாக வெளிவரும் Journal Cancer இதழில் வெளியாகியிருக்கும் புதிய கட்டுரை ஒன்றும், மதுவுக்கு எதிரான கருத்தை வலிமையாக எடுத்து வைக்கிறது.
புற்றுநோயை உருவாக்குவதில் மதுப்பழக்கம் எத்தனை முக்கிய இடத்தைப் பெறுகிறது என்பதை ஆராய்ச்சிக்கான கருப்பொருளாக எடுத்துக் கொண்டனர். இந்த ஆய்வில் 63,232 புற்றுநோயாளிகளிடம் இருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டது. ஆய்வின் பங்கேற்பாளர்கள் தங்களுடைய அன்றாட, சராசரியான மது அருந்தும் அளவு மற்றும் மது அருந்தும் நேரம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
இவர்களில் புற்றுநோய் ஆபத்துக்கும் ஆல்கஹால் நுகர்வுக்கும் இடையே நேரடியான தொடர்புகள் இருந்ததைக் கண்டறிய முடிந்தது. இரண்டு அல்லது அதற்கும் குறைவான மதுபானங்களை அருந்தியவர்கள் எவ்வளவு காலம் அருந்தினாலும் அவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகமாக இருந்தது. ஒட்டுமொத்த ஆல்கஹால் நுகர்வு பூஜ்ஜியமாக இருக்கும்போது புற்றுநோய் ஏற்படும் ஆபத்து குறைவாக இருந்தது.
புகைப்பிடித்தல், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவுநோய், உடல்பருமன் போன்ற பிற நோய்க் காரணிகளைக் கட்டுப்படுத்திய பிறகு ஒரு மதுபானத்தை 10 வருடங்கள் உட்கொள்வது அல்லது 5 வருடங்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு பானங்களை உட்கொள்வது போன்ற பழக்கங்களும் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை 5 சதவிகித அளவு அதிகரித்தது.
மதுப்பழக்கம் இல்லாதவர்களோடு (Teetollars) ஒப்பிடும்போது ஒரு மதுபானத்தை 40 ஆண்டுகளாக அன்றாடம் அருந்தி வருபவர்க்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து 54 சதவிகிதம் அதிகரிப்பதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு துளியாக இருப்பினும் விஷம் என்பது விஷமே என்பதை உணர வேண்டிய தருணம் இது