கொரோனா வைரஸ் தொற்றால் மரணம்தான் முடிவா?

கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழக்கும் வாய்ப்பு 0.5% – 1% இருப்பதாக பிரிட்டன் அரசாங்கத்தின் அறிவியல் ஆலோசகர்கள் நம்புகின்றனர்.

கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டவர்களின் இறப்பு விகிதத்தை விட இது குறைவாக உள்ளது.

உலகளவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களின் இறப்பு விகிதம் 4 சதவீதமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தரவுகள் கூறுகின்றன. பிரிட்டனில் மார்ச் 23ஆம் தேதிவரை இறப்பு விகிதம் 5 சதவீதமாக இருந்தது. ஏனெனில், அனைத்து தொற்றுகளும் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்படுவதில்லை.

யார் யாருக்கெல்லாம் பரிசோதனை செய்யவேண்டும் என்ற முடிவை அந்தந்த நாடுகளே எடுக்கின்றன. அதனால், ஒவ்வொரு நாட்டில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது அந்நாட்டின் இறப்பு விகிதத்தை தரவுகளுக்காக எடுத்துக் கொள்ள முடியாது.

கொரோனா வைரஸ்

மேலும் இறப்பு விகிதம் என்பது ஒருவருடைய வயது, உடல்நலம் மற்றும் அவருக்கு எந்த மாதிரியான சிகிச்சை கிடைத்திருக்கிறது போன்றவற்றை பொறுத்ததாகும்.

என்னென்ன அபாயங்கள் உள்ளன?

கொரோனா வைரஸ் தொற்றால் வயதானவர்கள் மற்றும் உடல்நலம் சரியில்லாதவர்கள் உயிரிழக்கும் அபாயம் அதிகம் உள்ளது.

80 வயதிற்கு மேல் உடையவர்களின் இறப்பு விகிதம் சுமார் 10 முறை அதிகமாக இருப்பதாகவும், அதுவே 40 வயதிற்கு கீழ் இருப்பவர்களின் இறப்பு விகிதம் குறைந்து காணப்படுவதாகவும் லண்டன் இம்பீரியல் கல்லூரி கணக்கீடுகள் கூறுகின்றன.

வயதானவர்கள்

“வயதானவரகளுக்கான இறப்பு விகிதம் அதிகமாக இருந்தாலும், பெரும்பான்மையான முதியவர்களை, மிதமான அளவிலேயே கொரோனா தாக்கியுள்ளது. அதே நேரத்தில் இது இளம் வயதினரை தாக்காது என்று கூறமுடியாது. இளம் வயதை சேர்ந்த சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று எச்சரிக்கிறார் பிரிட்டன் அரசாங்கத்தின் தலைமை மருத்துவ ஆலோசகர் பேராசிரியர் கிரிஸ் விட்டி.

இந்த கொரோனா தொற்றின் ஆபத்தை தீர்மானிப்பது வயது மட்டுமல்ல.

சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் 44,000 பேரை ஆய்வு செய்ததில், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் அல்லது மூச்சுப் பிரச்சனை இருந்தவர்கள் மத்தியிலேயே ஐந்து முறை அதிகம் உயிரிழப்புகள் நேர்ந்தது தெரிய வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *