இத்தாலி உச்சக்கட்ட பீதியில் ஒரே நாளில் 189 பேர் உயிரிழப்பு
ரோம் : இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதித்து ஒரே நாளில் 189 பேர் உயிரிழந்துவிட்டதால் அந்நாட்டில் உச்சக்கட்ட பீதி நிலவுகிறது. சீனாவுக்கு அடுத்தப்படியாக தற்போது இத்தாலி மற்றும் ஈரானில் கொரோனா வைரஸ் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 100-க்கும் அதிகமான நாடுகளில் பரவி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளது.
இந்ந்திலையில் சீனாவுக்கு அடுத்ததாக கொரோனா இத்தாலியில் வேகமாக பரவிவருகிறது. ஒரு மாதமாக இத்தாலியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ள நிலையிலும் அங்கு தினம் தினம் அதிகரித்து வரும் உயிரிழப்பால் உலக நாடுகள், கவலை அடைந்துள்ளனர். இத்தாலியில் 24 மணி நேரத்தில் 189 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால் இத்தாலியில் கொரோனா தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,016 ஆக அதிகரித்துவிட்டது. இதனிடையே கொரோனா வைரஸ் எதிரொலியாக இத்தாலி தலைநகரான ரோமில் இன்று முதல் விமான நிலையம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரோமில் உள்ள மற்றொரு விமான நிலையத்தை 17ம் தேதி முதல் மூட இத்தாலி அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுத்து நிறுத்த இத்தாலி அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.மருந்தகங்கள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற வர்த்தக அங்காடிகள் அனைத்தையும் மூட இத்தாலிப் பிரதமர் கியூசபே காண்டே உத்தரவிட்டுள்ளார். மருத்துவம் மற்றும் முக்கிய பணிகளை தவிர வேறு எந்த காரணங்களுக்காகவும் மக்கள் வீட்டை விட்டு வெளியேற இத்தாலி அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளவர்களில் 1000 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது….