கள்ளக் காதலனை திருமணம் செய்வதற்காக ஒன்றரை வயது குழந்தையை கொன்ற தாய்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூரில் பேஸ்புக் மூலம் பழகிய கள்ளக்காதலனை திருமணம் செய்வதற்காக ஒன்றரை வயது குழந்தையை கடலில் வீசி கொன்ற இளம் பெண்னை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த கொலை பழியை கணவர் மீது போட முயன்ற பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் கண்ணூர் தையில் பகுதியை சேர்ந்தவர் பிரணவ் (29). இவரது மனைவி ஷரண்யா (22). இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் வியான் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அதன்படி ஷரண்யா தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரணவுக்கு, ஷரண்யா போன் செய்தார்.

போனில் பேசியவர், தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதாகவும், தனது தாய் வீட்டுக்கு வருமாறும் அழைத்துள்ளார். இதையடுத்து அவர் ஷரண்யா வீட்டுக்கு சென்றார். பின்னர் இரவு மனைவி வீட்டிலேயே தங்கினார். மறுநாள் காலை எழுந்து பார்த்த போது அருகில் படுத்திருந்த மகன் வியானை காணவில்லை என்று ஷரண்யா கூறினார். இதையடுத்து அனைவரும் குழந்தையை தேடி பார்த்தனர். நீண்ட நேரமாக தேடியும் குழந்தையை காணவில்லை. இது தொடர்பாக கண்ணூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதன் ஒரு பகுதியாக போலீசார் கணவன்-மனைவி இடையே விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினர். இதனால் போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.  இந்த நிலையில் நேற்று காலை வீட்டின் அருகே உள்ள கடற்கரையில் பாறைகளுக்கு இடையே வியானின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கண்ணூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதே குழந்தையின் மரணத்துக்கு காரணம் என்பது தெரியவந்தது. இந்த நிலையில் மீண்டும் கணவன், மனைவியிடம் போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தினர். அப்போது தன் மீது உள்ள கோபத்தால் பிரணவ் தான் குழந்தையை கொலை செய்து இருக்க வேண்டும் என்று ஷரண்யா கூறினார். ஆனால் பிரணவ் இதனை மறுத்தார். அதேவேளையில் ஷரண்யாவின் நடவடிக்கையில் பல்வேறு மாற்றங்கள் காணப்பட்டன. இது போலீசாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ஷரண்யாவின் உடையை போலீசார் வேதியியல் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதில் உடையில் கடல் நீர் பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர் தான் கடற்கரைக்கு அழைத்து சென்று குழந்தையை கொலை செய்து இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். இதையடுத்து போலீசாரை அவரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது குழந்தையை கடலில் வீசி கொலை செய்ததை ஷரண்யா ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவரது செல்போனை பரிசோதித்து பார்த்தனர். அப்போது ஒரு வாலிபருடன் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்த. இது தொடர்பாக போலீசார் ஷரண்யாவிட் தீவிரமாக விசாரித்தனர். அப்போது பேஸ்-புக் மூலம் ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்ட தெரியவந்தது. இதுதவிர பேஸ்புக் காதலரை திருமணம் செய்ய முடிவு செய்தவர், குழந்தை இடையூறாக இருப்பதை எண்ணி இருக்கிறார். ஆகவே குழந்தையை கொல்ல தீர்மானித்ததாகவும் கூறி உள்ளார்.

இந்த கொலை பழியை கணவர் மீது போடவே அவரை வீட்டுக்கு அழைத்ததாகவும் ஷரண்யா கூறினார். இதையடுத்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *