எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் புதுடில்லி பறந்தார் கோட்டா!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று இந்தியா சென்றுள்ளார்.

கோட்டாபயவின் இந்தியப் பயணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் புதுடில்லியில் இன்று காலையிலிருந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வைகோவை புதுடெல்லிப் பொலிஸார் கைதுசெய்து அழைத்துச் சென்றனர்.

இந்தநிலையில், கோட்டாபய இன்று நண்பகல் இந்தியா பறந்துள்ளார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று அவர் அங்கு சென்றுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, திறைசேரி செயலாளர் சஜித் ஆட்டிகல, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார ஆகியோரும் ஜனாதிபதியுடன் இந்தியா சென்றுள்ளனர்.

இந்தப் பயணத்தின்போது இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆகியோரை கோட்டாபய சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *