இலங்கை வரலாற்றில் முக்கிய தேர்தல்! தமிழ் மக்கள் தவறாது வாக்களிக்கவேண்டும்!! – சம்பந்தன் அறைகூவல்
“இலங்கையில் இன்று நடைபெறுகின்ற ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் முக்கிய தேர்தல். எனவே, வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள தமிழ் மக்கள் அனைவரும் தவறாது வாக்களிக்கவேண்டும்.”
– இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“நாட்டின் ஆட்சியை மக்கள்தான் தீர்மானிக்கின்றார்கள். தங்கள் ஜனநாயக உரிமை மூலம் இந்தத் தீர்மானத்தை எடுப்பது அவர்களின் பிரதான கடமை.
இந்த நாட்டில் வாழ்வுரிமை வேண்டுமெனில் வாக்குரிமையுள்ள சகல மக்களும் வாக்களிக்தே ஆகவேண்டும். எக்காரணம் கொண்டும் அந்தக் கடமையிலிருந்து எவரும் பின்வாங்கவே கூடாது.
நாட்டில் இன்று நடைபெறுகின்ற ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் முக்கிய தேர்தல்; தமிழ் மக்களின் அடுத்தகட்டத்தைத் தீர்மானிக்கின்ற – சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள தேர்தல். எனவே, வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள தமிழ் மக்கள் அனைவரும் தவறாது வாக்களிக்கவேண்டும். அவர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையைக் குறிப்பிட்ட நேரத்துக்குச் சென்று சரிவர நிறைவேற்ற வேண்டும்” – என்றார்.