சஜித்தை மதிக்கின்றேன்! – கோட்டா அதிரடிக் கருத்து
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் சஜித் பிரேமதாஸவுக்கும் தனக்கும் இடையில் கொள்கை ரீதியில் பல்வேறு வேறுபாடுகள் இருப்பினும், அவருக்கு மதிப்பளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று தாக்கல் செய்யப்பட்டன. அங்கு தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த கோட்டாபய ராஜபக்ச, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் புகைப்படத்தை தன்னுடைய உத்தியோகபூர்வ ‘பேஸ்புக்’ பக்கத்தில் பகிர்ந்திருப்பதுடன், அதன் கீழ் மேற்கண்டவாறு பதிவிட்டும் உள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை தேர்தல்கள் ஆணைக்குழுவில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தேன். போட்டியாளர்கள் தத்தமது கொள்கைகளில் ஒருவருக்கொருவர் முரண்பட்டாலும்கூட ஒருவர் மீதொருவர் மரியாதை கொண்டிருப்பர் என்பதே என்னுடைய நம்பிக்கையாகும்” – என்றுள்ளது.