நீதிமன்றத் தீர்ப்பு மக்களின் வெற்றி! – கோட்டா கூறுகின்றார்
“ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிடுவதைத் தடுக்கும் நோக்குடனேயே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எனக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு அர்த்தமற்றது என்பதை நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக நாட்டு மக்கள் உணர்ந்துவிட்டார்கள். நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு எனக்கு மட்டுமல்ல நாட்டு மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் இலங்கைப் பிரஜாவுரிமையைச் சவாலுக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதியரசர்கள் குழாமால் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் சர்வதேச செய்திச் சேவையொன்றின் கொழும்புச் செய்தியாளர் கோட்டாபயவிடம் வினவியபோதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“மனச்சாட்சியின் பிரகாரம் எனக்கு நீதி கிடைத்துள்ளது. இதில் எனக்கு நம்பிக்கை இருந்தது. எவராலும் நான் போட்டியிடுவதைத் தடுக்கவே முடியாது. அதேவேளை, நான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதையும் எந்தச் சக்தியாலும் தடுக்கவே முடியாது. மக்கள் சக்தி – மக்கள் பலம் எம் பக்கம் உள்ளது. எனவே, நான் எதற்கும் அஞ்சமாட்டேன். ஜனாதிபதித் தேர்தலில் மாபெரும் வெற்றிச் செய்தியுடன் இந்த நாட்டை நான் ஆள்வேன். என்னை அரியணை ஏற்றக் காத்திருக்கும் மக்களின் துயரை நான் துடைப்பேன்” – என்றார்.