சு.கவுக்கு சந்திரிகா உபதேசம்!
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக ஒருவரை நியமிப்பதாக இருந்தால் அது கட்சியின் எதிர்காலத்துக்கு ஆரோக்கியமானதாகும்.”
– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
அத்தனகல்ல பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாமல் போனாலும் அடுத்துவரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிபெறச்செய்ய கட்சியின் வாக்குகளைத் தொடர்ந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ஆனால், கட்சியின் தலைமை சில விடயங்களில் தனித்துத் தீர்மானம் எடுக்கின்றது.
அத்துடன் மீண்டும் அதிகாரத்தில் இருக்கும் நோக்குடனே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து செயற்படுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறான நடவடிக்கைகள் எனது கொள்கைக்குப் பொருந்தாது. அதனால் அவ்வாறான கலந்துரையாடல்களில் நான் ஒருபோதும் பங்கேற்கப்போவதில்லை” – என்றார்.