சு.கவின் 68ஆவது மாநாடு! கொழும்பில் கோலாகலம்!!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68ஆவது தேசிய மாநாடு, கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (03) மாலை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.
‘தீர்ப்பு சரியான பக்கத்துக்கு’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த கட்சியின் ஏராளமான ஆதரவாளர்கள் பங்குபற்றினர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68ஆவது ஆண்டு நிறைவு விழா சஞ்சிகை மற்றும் கட்சியின் எதிர்கால கொள்கைத் தொடரும் ஜனாதிபதியிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.
கட்சி உறுப்பினர்களுக்கான காப்புறுதித் திட்டம் வழங்கப்படுவதை ஜனாதிபதி அடையாளப்படுத்தி வைத்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களான நிமல் சிறிபால டி சில்வா, டி.எம்.ஜயரட்ன, பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச, கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் துமிந்த திஸாநாயக்க, மஹிந்த அமரவீர உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும், இதர கட்சித் தலைவர்கள், ஆளுநர்கள், முதலமைச்சர்கள், கல்விமான்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், அரச அதிகாரிகள், மதகுருமார்கள், ஆதரவாளர்கள் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.