சஜித்தின் சகாக்களுக்கு ஆப்பு! – ஒழுக்காற்று நடவடிக்கை ஆரம்பம்
அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களான சுஜீவ சேனசிங்க, அஜித் பி. பெரேரா ஆகியோருக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
கட்சித் தலைமைக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து கட்சியின் யாப்பை மீறும் வகையில் செயற்பட்டமையினாலேயே இருவரிடமும் விளக்கம் கோருவதற்கு ஒழுக்காற்று நடவடிக்கைக் குழு தீர்மானித்துள்ளது.
ஒழுக்காற்று நடவடிக்கையின் ஆரம்பகட்ட நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பான அறிவித்தல் கடிதம் மேற்படி இரு அமைச்சர்களுக்கும் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசத்தால் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 9ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் எழுத்து மூலம் விளக்கமளிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
கட்சி யாப்பின் 6 சரத்துகளை அப்பட்டமாக மீறும் வகையில் இருவரும் செயற்பட்டுள்ளனர் என அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை களமிறக்க வேண்டும் என சுஜீவ சேனசிங்கவும், அஜித் பி. பெரேராவும் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.