தெரிவுக்குழு முன் சாட்சியமளிக்க மைத்திரிக்கு எழுத்துமூல அழைப்பு!
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை விசாரணை செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை முன்னிலையாகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
எழுத்துமூலமாக இந்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவுக்குழுவின் தலைவரான பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
இதற்கான திகதி மற்றும் நேரத்தை ஜனாதிபதியை வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.
ஜனாதிபதி திகதி கொடுத்தால், அதன் பின்னர் ஜனாதிபதி தெரிவுக்குழு முன் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவுக்குழு முன் ஆஜராகமாட்டேன் என அண்மையில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தெரிவுக்குழு முன் ஆஜராகாவிட்டாலும் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவுக்குழுவின் தலைவரான பிரதி சபாநாயகர் கூறியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை விசாரணை செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஆயுட் காலம் இம்மாதம் 23ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், அது அடுத்த மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.