வாக்குறுதிகளை நிறைவேற்ற மைத்திரிக்கு கால அவகாசம்! – விதித்தது தமிழ்க் கூட்டமைப்பு

கடந்த காலங்களில் காணி விடுவிப்புத் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்குக்கு வரும்போது நிறைவேற்றவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு காலக்கெடு விதித்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

இது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடுவதற்கு எதிர்வரும் 28ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்துக்கு, கூட்டமைப்பினரையும் தொடர்புடைய திணைக்களத்தினரையும் ஜனாதிபதி அழைத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை.சோ.சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாலை 6.15 மணிக்கு நடைபெற்றது. சுமார் 20 நிமிடங்கள் வரையில் இந்தச் சந்திப்பு நீடித்தது.

வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு திணைக்களாலும் இடம்பெறும் காணி ஆக்கிரமிப்புக்கள் பற்றிப் பேசப்பட்டுள்ளது. மயிலிட்டித்துறைமுக அடிக்கல் நடும் நிகழ்வுக்கு 2018ஆம் ஆண்டு ஜனாதிபதி வரும்போது, ஆண்டு இறுதிக்குள் மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என்று வாக்குறுதி வழங்கியிருந்தார். அந்த வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்பதை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராஜா சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வரும்போது, காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று அழுத்தமாக கூட்டமைப்பினர் தெரிவித்தனர். மேலும் பிக்குகளால் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டியபோது, பிக்குகளால் இங்கும் பிரச்சினைதான் என்று ஜனாதிபதி மைத்திரிபால பதிலளித்தார்.

மேலும், வனவளத் திணைக்களம், வன உயிரிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், இராணுவத்தினர் உள்ளிட்ட சகல தரப்பினரையும் உள்ளடக்கி எதிர்வரும் 28ஆம் திகதி காலை 11 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் மீண்டும் கலந்துரையாடுவோம் என்று ஜனாதிபதி இந்தச் சந்திப்பில் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *