ராஜபக்ச கைகளுக்குள் மீளச் செல்லாது ஆட்சி!! – அடித்துக் கூறுகின்றார் அமைச்சர் ரஞ்சித்

“2015ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றி ஜனநாயகத்தை அனைவருக்கும் பொதுவுடமையாக்கிய ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் மஹிந்த ராஜபக்சவிடம் ஒருபோதும் ஆட்சியை ஒப்படைக்காது.”

– இவ்வாறு தெரிவித்தார் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து பதுளையில் நேற்று மாலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் அரங்கேறிய ஊடகவியலாளர்கள் படுகொலை, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் கற்பழிப்பு மற்றும் வெள்ளை வான் கடத்தல்களை மறந்துவிட முடியாது.

இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் புகழ் பாடுபவர்கள் ராஜபக்ச அரசின் முறைகேடுகளை மீள நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

குடும்ப ஆட்சியை இல்லாதொழித்து ஜனநாயகம் மிக்க அரசைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து மக்களின் அரசியல் தீர்வாகக் காணப்பட்டது. இதனை இலக்காகக் கொண்டே ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

2015ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றி ஜனநாயகத்தை அனைவருக்கும் பொதுவுடமையாக்கிய ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் மஹிந்த ராஜபக்சவிடம் ஒருபோதும் ஆட்சியை ஒப்படைக்காது. நிச்சயம் மீண்டுமொரு அரசியல் பின்னடைவை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எதிர்க்கொள்ளும் ” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *