நீதியும் சமத்துவமும் பேணப்பட வேண்டும் என்பதில் மிக உறுதியாக நின்றவர் சுஷ்மா! – கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இரங்கல்
“இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும் இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான சுஷ்மா சுவராஜின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைகின்றோம்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“சுஷ்மா சுவராஜ்ஜைச் சந்தித்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவர் எம்முடன் மிகவும் நெருக்கமாக இடைப்பட்ட ஒருவராவார்.
மேலும், ஒரு நாட்டிலே சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் அடைவதற்கு அந்நாட்டு அனைத்து பிரஜைகள் மத்தியிலும் நீதியும் சமத்துவமும் பேணப்படவேண்டும் என்பதில் மிக உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த ஒருவருமாவார்.
இந்திய அரசுக்கும் அதன் குடிமக்களுக்கும் விசேடமாக மறைந்த சுஷ்மா சுவராஜின் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்” – என்றுள்ளது.