ரணில் அணிக்கு மரண அடி கொடுக்கும் வேட்பாளரையே களமிறக்குவார் மஹிந்த! – தினேஷ் கூறுகின்றார்
“ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் வேட்பாளர் களமிறங்குவது உறுதி. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விரும்பினால் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் கூட்டணி அமைக்கலாம். ஆனால், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பிலேயே வேட்பாளர் தெரிவுசெய்யப்படுவார். ரணில் அணியினரைப் படுதோல்வியடையச் செய்யக்கூடிய வேட்பாளரையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவுசெய்வார்.”
– இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் எமது அணிக்குள் குழப்பம் இருக்கின்றமை உண்மைதான். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி மாதிரி எமது அணிக்குள் பெரிய குழப்பம் இல்லை. எமது அணியில் எந்த வேட்பாளர் களமிறங்கினாலும் அவர் ரணில் அணியினரைத் தோற்கடிக்கக்கூடியவராகவே இருக்க வேண்டும். எனவே, சிறந்த வேட்பாளரைத் தெரிவுசெய்யக்கூடிய தகுதி மஹிந்த ராஜபக்சவுக்கே உள்ளது. அவரே வேட்பாளரைத் தெரிவு செய்வார்.
ராஜபக்ச ஆட்சியில் இந்த நாடு அபிவிருத்தி கண்டது. பொருளாதாரம் வளர்ச்சியடைந்தது. ஆனால், இன்று எல்லாம் தலைகீழாக மாறியுள்ளது. இதற்கு ரணிலின் ஊழல், மோசடி ஆட்சியே பிரதான காரணம். இதற்கெல்லாம் விரைவில் முடிவுகட்டப்படும்” – என்றார்.