வேட்பாளர் சர்ச்சைக்கு ஓகஸ்ட்டில் முடிவு; தமிழ், முஸ்லிம் மக்கள் எம்மை ஆதரிப்பர்! – மஹிந்த நம்பிக்கை
“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற சர்ச்சைக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முடிவு கிடைக்கும்.”
– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இதுவரையில் எமது அணியில் வேட்பாளர் தெரிவுக்கு ஐவரது பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
எமது அணியில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளினதும் தீர்மானத்துக்கு அமைய ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார்.
இதேவேளை, அரச தலைவர் தேர்தலின்போது தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற முடியும் என்ற நம்பிக்கை எமக்குக் காணப்படுகின்றது.
உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியிலே ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.எமக்கு எதிராகச் சாட்டப்பட்ட குற்றங்கள் எதுவும் இதுவரையில் நிரூபிக்கப்படவில்லை.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் வெற்றி பெற ரணில் அரசு தற்போது பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. தேர்தல் வெற்றிக்காக இம்முறை மேற்கொள்ளப்படும் தந்திரங்கள் செல்லுபடியாகாது” – என்றார்.