வாக்காளர் இடாப்பு பதிவின்போது தமிழ் பேசும் மக்களுக்கு அநீதியா? – உடன் அறிவிக்குமாறு வேலுகுமார் எம்.பி. கோரிக்கை
“வாக்காளர் இடாப்புகளில் தமது பெயர்களைப் பதிவு செய்யும்போது ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டிருந்தால் – திட்டமிட்ட அடிப்படையில் நிராகரிப்புகள் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் உடனடியாக அறிவிக்கவும்.”
– இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவு மற்றும் தேருநர் இடாப்பு மீளாய்வின்போது கண்டி மாவட்டத்தில் தமிழ் மக்களை இலக்குவைத்து புறக்கணிப்பும், நிராகரிப்பும் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:-
“இது சம்பந்தமாக இன்றுதான் எனக்கும் சில முறைப்பாடுகள் கிடைத்தன. குறிப்பாக நாலப்பிட்டியவில் தமிழர்களின் அரசியல் தளத்தை சிதைப்பதற்காக பேரினவாதிகளின் வழிகாட்டலுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கலாம்.
எனவே, வாக்காளர் பதிவு நடவடிக்கை தொடர்பில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தமிழ், முஸ்லிம் மக்கள் உடனடியாக உரிய ஆவணங்கள், எழுத்துமூல கோரிக்கை சகிதம் எமது கண்டி அலுவலகத்துக்கு வந்து முறையிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
சிலவேளை, சில அதிகாரிகளின் அசமந்தப்போக்கால்கூட தவறிழைக்கப்பட்டிருக்கலாம். எனவே, மீளாய்வின்போது அதைச் சரிசெய்வதற்குரிய வாய்ப்பு இருக்கின்றது.
மக்களின் முறைப்பாடுகளை ஏற்பதற்கு கண்டி அலுவலகத்தில் விசேட பிரிவொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இலக்கம், 155/A – வில்லியம் கொப்பல்லாவ மாவத்தை என்ற விசாலத்திலேயே எமது அலுவலகம் அமைந்துள்ளது.
எழுத்து மூலம் முறைப்பாடுகள் கிடைத்தால் அது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுடன் பேச்சு நடத்தி நீதியைப் பெறக்கூடியதாக இருக்கும்.
கண்டி மாவட்டத்தில் மட்டுமல்ல நாட்டில் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறு நடைபெற்றிருந்தால் அருகிலுள்ள எமது கட்சி அலுவலகங்களுக்கு அது தொடர்பில் தெளிவுபடுத்தலாம்” – என்றார்.