அப்துல்லா மக்ரூப் குழுவினர் மீது மு.கா. ஆதரவாளர்கள் தாக்குதல்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மக்ரூப் குழுவினர் மீது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் எனத் தெரிவிக்கப்படும் நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அம்பாறையில் இன்று இடம்பெற்ற இந்தத் தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மக்ரூப் கருத்துத் தெரிவிக்கையில்,
“அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பகுதியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முக்கியஸ்தர்கள் எமது கட்சியில் உத்தியோகர்வமாக இணைந்துகொண்டனர். இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசீமின் நெருங்கிய நபர் ஒருவரும் எம்முடன் இணைந்து எமக்கு இராப்போசனமும் வழங்கினார்.
இந்த விடயத்தை என்னிடம் செவ்வி மேற்கொண்ட ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்திருந்தேன். அது நேரலையாகவே இருந்தது. இதனைப் பார்த்துக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசீமின் ஆதரவாளர்கள் நான் தங்கி நின்ற ஒலுவில் துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான தங்குமிடத்துக்கு வந்து அராஜகத்தில் ஈடுபட்டனர்.
எனது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டனர். எனது வாகனத்தையும் கற்களால் அடித்துக் கண்ணாடிகளையும் நொறுக்கினர். அத்துடன், வீதியில் மரக்குற்றிகளையும், டயர்களையும் போட்டு எரித்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனே அறிவித்தேன்.
சம்பவ இடத்துக்கு கடற்படையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் வவந்து நிலைமையைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்” – என்றார்.