பிலிப்பைன்ஸில் லொறி கவிழ்ந்ததில் 8 மாணவர்கள் உட்பட 9 பேர் பரிதாபச் சாவு!

பிலிப்பைன்ஸ் நாட்டில் லொறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 மாணவர்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள பலோஜோன் நகரில் இருந்து சிபூ மாகாணம் நோக்கி லொறி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதில் 11 முதல் 12 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது ஆசிரியர்கள் பயணித்தனர்.

அவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் சென்றனர். பள்ளி மாணவர்களுடன் இணைந்து அவர்களது பெற்றோர்கள் சிலரும் அந்த லொறியில் பயணித்தனர்.

பலோஜோன் நகரின் மலைப்பாங்கான பகுதியில் லொறி சென்றுகொண்டிருந்தபோது அது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 8 பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும், 20 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயமடைந்த 20 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு விரையப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *