அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்ய ஏவுகணைகளை வாங்குகின்றது துருக்கி!
ரஷ்ய நாட்டிடம் இருந்து எஸ். – 400 ஏவுகணைத் தொகுதிப் பாகங்களை வாங்குகின்றது துருக்கி. இதை அமெரிக்கா விரும்பவில்லை. அது கடுமையாக எதிர்க்கின்றது.
ரஷ்யாவிடம் இருந்து எஸ். – 400 ஏவுகணைத் தொகுதிப் பாகங்களைத் துருக்கி வாங்கினால், அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிப்போம் என அமெரிக்கா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தது. ஆனால், அமெரிக்காவின் நிர்ப்பந்தத்துக்குத் துருக்கி அடிபணியவில்லை. தனது இராணுவத்தளவாட கொள்முதல் என்பது இறையாண்மையையொட்டிய விடயம் எனத் துருக்கி திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
இந்தநிலையில், நேற்றுமுன்தினம் ரஷ்யா, தனது எஸ். 400 ஏவுகணைத் தொகுதிப் பாகங்களைத் துருக்கிக்கு விநியோகிக்க தொடங்கியது. நேற்று தொடர்ந்து இரண்டாவது நாளாக ரஷ்யாவின் எஸ். 400 ஏவுகணைத் தொகுதிப் பாகங்களைத் துருக்கி பெற்றுள்ளது.
இது தொடர்பாக துருக்கி இராணுவ அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “முர்டெட் விமானப்படை தளத்துக்கு ரஷ்யாவின் 4ஆவது சரக்கு விமானம் வந்து சேர்ந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.
இதனால் அமெரிக்காவுக்கும், துருக்கிக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.