ரணிலும் கூட்டமைப்பினரும் நாட்டை அழிக்கிறார்களாம்!! – விமல் கண்டுபிடிப்பு
“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து இந்த நாட்டை அழிக்கின்றார்கள். இவர்களுக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் தக்க பாடம் புகட்ட வேண்டும்.”
– இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
“அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் ரணில் அரசைக் கவிழ்க்க நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால், அதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இல்லாமலாக்கி விட்டார்கள். கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரேரணையை எதிர்த்து வாக்களித்தபடியால் ரணில் அரசு மீண்டும் காப்பாற்றப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களுக்கு இந்த அரசு பொறுப்பேற்று ஆட்சியை எம்மிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். இந்த அரசு தொடர்ந்து ஆட்சியில் இருப்பது அவர்களுக்குத்தான் வெட்கக்கேடு.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து இந்த நாட்டை அழிக்கின்றார்கள். இவர்களுக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
எதிர்வரும் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியே ஆட்சியமைக்கும். அழிவடைந்து கொண்டிருக்கும் இந்த நாட்டுக்கு நல்ல காலம் விரைவில் பிறக்கும்” – என்றார்.