28 ஓட்டங்களினால் வென்றது இந்தியா!
உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில், 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 314 இந்திய அணி எடுத்தது.
தனது தனித்துவமான ஆட்டத்தின் மூலம் பவுண்டரிகளையும், சிக்சர்களையும் பறக்கவிட்ட ரோகித் சர்மா இந்த உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நான்காவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.
உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கராவின் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா 92 பந்துகளில் 104 ஓட்டங்கள் (5 சிக்ஸர், 7 பவுண்டரி) எடுத்தார்.
பங்களாதேஷ் அணியின் சார்பில் அதிகபட்சமாக, முஸ்தாபிஜூர் ரகுமான் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் 315 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பங்களாதேஷ் அணி துடுப்பெடுத்தாடியது.
48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 286 ஓட்டங்களை மட்டுமே பங்களாதேஷ் அணி எடுத்தது.
தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைச் சதம் பதிவு செய்த ஷாகிப் அல்-ஹசன் 66 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் தனிநபராகப் போராடிய முகமது சைபுதீன் 51 ஓட்டங்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதன்மூலம் பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.