போதைப்பொருள் வர்த்தகம் மூலமே ஆயுதங்கள் வாங்கினார் பிரபாகரன்! – இப்படிக் கூறுகின்றார் மைத்திரி

“போதைப்பொருள் விற்பனைதான் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வருமானமாக இருந்தது. உலகத்திலுள்ள போதைப்பொருள் வர்த்தகர்களுடன் பிரபாகரனுக்குத் தொடர்பு இருந்தது. போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம்தான் பிரபாகரன் ஆயுதங்களை வாங்கிப் போர் நடத்தினார்.”

 
– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
 
“சர்வதேசப் போதைப்பொருள் வலையமைப்புக்கும் சர்வதேச பயங்கரவாதத்துக்கும் இடையில் தொடர்பு இருக்கின்றது. கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கும் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புக்கும் சம்பந்தமிருக்கின்றது” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற தேசிய போதைப்பொருள் ஒழிப்பு மேல் மாகாண மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
“நாட்டையும் மக்களையும் அழிவுக்குள்ளாக்கிவரும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்காக கடந்த நான்கு வருட காலமாக நாம் முன்னெடுத்த பாரிய நிகழ்ச்சித் திட்டத்துக்கு கடுகளவேனும் உதவாதவர்கள் இன்று போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராகக் கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் என்னைக் குற்றவாளியாக நாட்டுக்குக் காட்டுவதற்கு முயற்சிக்கின்றனர்.
 
போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள மூன்று இலட்சம் இளைஞர்களைப் பாதுகாப்பதற்கும் அக்குடும்பங்களைக் கவலையிலிருந்து விடுவிப்பதற்கும் அதிகாரம் இருந்தபோதும், எதிர்க்கட்சியில் இருந்தபோதும் அவர்கள் செய்த பணி என்னவென்றுதான் அவர்கள் அனைவரிடமும் கேட்கின்றேன்.
 
தேசத்தினதும் எதிர்கால தலைமுறையினதும் நன்மைக்காகவே உயிர் அச்சுறுத்தலையும் கவனத்தில்கொள்ளாது போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்துக்குத் தலைமைத்துவம் வழங்கி வருகின்றேன்.
 
தேசத்தை அழிவுக்குள்ளாக்கக்கூடிய இலகுவான விடயம் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலாகும். இலங்கை தாய்நாட்டை மற்றுமொரு மெக்சிக்கோவாக மாற்றுவதற்கு இடமளிக்காது போதையிலிருந்து விடுபட்ட நாடு என்ற எண்ணக்கருவை மேம்படுத்துவதற்காக செயற்பட்டு நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கு அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து பிரஜைகளும் தமது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரணதண்டனை வழங்குவதற்கு எடுத்த தீர்மானம் தொடர்பில் சில சர்வதேச அமைப்புக்கள் இன்று இலங்கைக்கு அச்சுறுத்தல் விடுத்து வருகின்றன. மரணதண்டனையை நிறைவேற்றினால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இரத்து செய்யப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு சர்வதேச அமைப்புக்களின் உதவி அவசியம் என்றாலும் நாட்டின் அபிவிருத்தியில் தலையிடுவதற்கோ அல்லது அதன் இறைமைக்கு அச்சுறுத்தல் விடுக்கவோ எவருக்கும் உரிமை கிடையாது.
 
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் பற்றிய தகவல்கள் இரகசியமானதல்ல. நாட்டைப் பாதுகாப்பதற்கு எத்தனை அரசியல்வாதிகள் தமது பொறுப்பை நிறைவேற்றுகின்றார்கள் என்பது கேள்விக்குரியதாகும்” – என்றார்.
 
பேதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி விசேட செயலணியும் தேசிய அபாயகரமான ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையும் இலங்கைப் பொலிஸாரும் இணைந்து தயாரித்துள்ள போதைப்பொருள் பாவனை பரவல் தொடர்பான தேசிய ஆய்வறிக்கை இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
 
மகாசங்கத்தினர் உள்ளிட்ட சமயத் தலைவர்கள், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சிறைக்கைதிகள், புனர்வாழ்வு நிலையங்களைச் சேர்ந்தவர்கள், பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் சாரதிகள், சாரதி உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *