டுபாயில் பஸ் விபத்து; 17 பேர் பரிதாபச் சாவு!
டுபாயில் இடம்பெற்ற வீதி விபத்தில் பஸ் ஒன்றில் பயணம் செய்த 17 பேர் பரிதாபமாகப் பலியாகினர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஓமன் நாட்டு தலைநகரம் மஸ்கட்டில் இருந்து டுபாய் நோக்கிப் பயணிகள் பஸ் ஒன்று நேற்று (06) மாலை சென்றுகொண்டிருந்தது. அதில் வெளிநாட்டவர்கள் உட்பட முப்பதுக்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
டுபாய் அருகே வந்தபோது, பஸ் விபத்தில் சிக்கி நொறுங்கியது. இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியாகினர். மேலும், 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் சேர்த்தனர்.
விசாரணையில், பஸ்ஸில் பயணித்தவர்கள் ஓமனில் ரம்ழான் கொண்டாட்டங்களில் பங்குபெற்றுத் திரும்பியமை தெரியவந்தது.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.