தேரருக்காக ஜனாதிபதியிடம் தூது செல்லும் தயாசிறி எம்.பி.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்தப்படும் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது:-
“எல்லைமீறிச் செயற்பட வேண்டாம் என ஆளுநர்களுக்கு நாம் பல தடவைகள் அறிவிப்பு விடுத்தோம். ஆனால், அவர்கள் செவிமடுக்கவில்லை.
இதனால், நாட்டில் தற்போது பெரும் சர்ச்சை உருவெடுத்துள்ளது. இந்த நிலையில்கூட அவர்கள் ஊடகங்களுக்கு விடுக்கும் அறிவிப்புகளை நிறுத்தவில்லை.
அதேவேளை, பயங்கரவாதிகளுக்குக் களம் அமைத்துக் கொடுப்பவர்களுக்கு அதியுச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம்.
எனவே, அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுமானால் அவருக்கும் இக்கோட்பாடு பொருந்தும்” – என்று குறிப்பிட்டுள்ளார்.