உலகக் கிண்ண முதல் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி!

உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 104 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து, தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி இலண்டனில் நடைபெற்றது.

இதில், நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது.

இதையடுத்துத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியில் பேரிஸ்டோவ் டக் ஆட்டமிழந்தாலும், ராய் (54), ரூட் (51), மோர்கன் (57) மற்றும் ஸ்டோக்ஸ் (89) ஆகியோர் அபாரமாக விளையாடி அரைச் சதம் அடித்தனர்.

50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 311 ஓட்டங்கள் எடுத்தது. தென்னாபிரிக்கா அணி தரப்பில் நெகிடி 3 விக்கெட்டுக்களைச் சாய்த்தார்.

இதையடுத்து, 312 ஓட்டங்கள் என்ற இலக்குடன் தென்னாபிரிக்கா அணி விளையாடியது. டி காக், ஆம்லா தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். தொடக்கத்திலே ஆர்ச்சர் பந்துவீச்சில் தலையில் அடிபட்டு ரிட்டையர் ஹட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த மார்க்ரம் 13, கப்டன் டு பிளிசிஸ் 5 ஓட்டங்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். டி காக், துசென் ஜோடி சற்று நேரம் தாக்குப் பிடித்தது. டி காக் 68 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். துசென் 50 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

எதிர்பார்க்கப்பட்ட டுமினி 8 ஓட்டங்களில் நடையைக் கட்டினார். பெலுக்வயோ சற்று நேரம் தாக்குப் பிடித்து 24 ஓட்டங்கள் எடுத்தார்.

மற்றவர்கள் சொற்ப ஓட்டடங்களுடன் ஆட்டமிழந்தனர். தென்னாபிரிக்கா அணி 39.5 ஓவரில் 207 ஓட்டன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இங்கிலாந்து அணி 104 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுக்களைச் சாய்த்தார். பிளங்கட், ஸ்டோக்ஸ் தலா இரண்டு விக்கெட்டுக்களைச் சாய்த்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *