ஈஸ்டர் தாக்குதல்களை விசாரிக்க தெரிவுக்குழுவை நியமித்தார் கரு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை சபாநாயகர் கரு ஜயசூரிய நியமித்துள்ளார்.
கடந்த மாதம் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலும், அந்தத் தாக்குதல்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அமைச்சர்கள் உதவியுள்ளனரா எனக் கண்டறிவது குறித்தும் விசாரணை செய்வதற்காகத் தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய, தெரிவுக்குழுவின் விபரத்தை சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இந்தத் தெரிவுக்குழுவுக்குத் தலைவராக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிங்க செயற்படவுள்ளார்.
இதன் உறுப்பினர்களாக அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, ராஜித சேனாரத்ன ஆகியோரும், நாடாளுமன்ற உறுப்பினர்களான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஜயம்பதி விக்கிரமரத்ன, எம்.ஏ.சுமந்திரன், ஆசு மாரசிங்க, நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தெரிவுக்குழுவின் உறுப்பினராக ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன நேற்று நியமிக்கப்பட்டிருந்தார். எனினும், இதிலிருந்து தான் விலகுவதாக சபாநாயகருக்கு அவர் அறிவித்ததையடுத்து அவரின் இடத்துக்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தெரிவுக்குழுவில் இடம்பெற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த, மைத்திரி அணிகள் இரண்டும் மறுத்துவிட்டன.