ரிஷாத்துக்கு எதிரான குற்றச்சாட்டை ஆராய நாடாளுமன்றத் தெரிவுக்குழு! – அரசு அதிரடி; கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் தெரிவிப்பு
அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஆராய விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சியான ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று காலை நடந்தபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அமைச்சர் ரிஷாத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஆராய விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்படவுள்ளது எனவும், அந்தக் குழுவின் அறிக்கை சபைக்கு வரும் வரை அமைச்சர் ரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுக்க வேண்டாம் எனவும் இன்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபை முதல்வரான அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
எனினும், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள பொது எதிரணியின் தலைவர்கள், நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் காலம் தாழ்த்தாது உடன் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளுமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளனர்.