கோடிக்கணக்கான சொத்துக்கள் நாசம்! – நீர்கொழும்பு முஸ்லிம்கள் கண்ணீர்
“எமது கோடிக்கணக்கான சொத்துக்கள் வன்முறையாளர்களினால் அடித்து நொறுக்கப்பட்டு தீ மூட்டப்பட்டு நாசமாக்கப்பட்டுள்ளன. வாகனங்கள், தளபாடங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீள்பாவிக்க முடியாதளவு சேதங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.”
– இவ்வாறு நீர்கொழும்பு வன்முறையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
“எமது வீடுகள், தளபாடங்கள், வாகனங்கள் எனப் பல பெறுமதிமிக்க பொருட்கள் சிங்களவர்களினால் தாக்கி நாசம் செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தவேளை சில பகுதிகளில் மின்சாரம் திட்டமிட்டு நிறுத்தப்பட்டு, அதன்பின் எங்களுடைய உடமைகளுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் அச்சத்தால் நாம் வீடுகளில் மின்சாரத்தை நிறுத்தி வைத்திருந்தோம்.
இதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தியுள்ள வன்முறையாளர்கள், எமது வீடுகள் மீது கோழைத்தனமான தாக்குதல்களைத் தொடுத்துள்ளனர்.
வர்த்தக நிலையங்கள் உட்பட எங்களுடைய சொத்துக்களைத் தாக்கிச் சேதம் ஏற்படுத்துவதிலேயே வன்முறையாளர்கள் குறியாகச் செயற்பட்டனர்.
எமது சொத்துக்கள் தாக்கப்படும்போது சில இடங்களில் பொலிஸாரும் முப்படையினரும் வேடிக்கை பார்த்தனர்.
வன்முறையாளர்களினால் நாம் பரம்பரை பரம்பரையாகச் சேர்த்துவைத்த உடமைகளுக்குக்கூட சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், சில உடமைகள் களவாடப்பட்டுள்ளன” – என்றனர்.