கொள்கையுடன் போராடியமையால்தான் புலிகளை ஆதரித்தார்கள் தமிழ் மக்கள்!!

அவர்கள் மதவெறி பிடித்தவர்கள் அல்லர் என்கிறார் மைத்திரி

“தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எனினும், அவர்கள் மதவெறி பிடித்தவர்கள் அல்லர். அவர்கள் தமது இனத்துக்காக இறுதிவரைப் போராடினார்கள். கொள்கையுடன் அவர்கள் போராடியதால்தான் அவர்களைத் தமிழ் மக்கள் ஆதரித்தார்கள். இதுதான் உண்மை.”

– இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

சர்வதேச செய்திச் சேவையொன்றின் கொழும்புச் செய்தியாளருக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தமிழீழ விடுதலைப்புலிகளை ஒப்பிட முடியாது. விடுதலைப்புலிகள் இப்படி ஒரே நாளில் ஈவிரக்கமின்றித் தொடர் தாக்குதல்களை நடத்தியதில்லை. ஆனால், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கொள்கை இல்லாமல் – சில சர்வதேச நாடுகளின் சதிவலைக்குள் சிக்கி ஆட்டம் போடுகின்றார்கள். அவர்களின் ஆட்டத்தை நாம் விரைவில் அடக்கிக் காட்டுவோம். கைதுசெய்யக்கூடியவர்களைக் கைதுசெய்வோம். கைதுசெய்ய முடியாதவர்களைக் கூண்டோடு இல்லாதொழிப்போம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் ஒவ்வொரு நாளும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளும், அவர்களுடன் தொடர்புபட்டவர்களும் கைதுசெய்யப்பட்டு வருகின்றார்கள். இவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை வழங்குவோம்.

இந்த நாட்டில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளாக முஸ்லிம்கள் இருக்கின்றபடியால் அனைத்து முஸ்லிம் மக்களையும் நாம் சந்தேகக்கண்ணோடு பார்க்கக்கூடாது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *