வாள்கள், துப்பாக்கியுடன் வசமாகக் சிக்கிய தற்கொலைக் குண்டுதாரிகளின் அண்ணன்!

கொழும்பில் இரண்டு ஹோட்டல்களில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்களின் மூத்த சகோதரர் வாள்கள் மற்றும் துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தெமட்டகொட மகாவில வீட்டுத் திட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் மறைந்திருந்தபோது விசேட அதிரடிப்படையினரால் மொஹமட் இப்ரான் அஹமட் என்ற நபர் நேற்றுக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்து, ஜேர்மனி தயாரிப்பான air gun எனப்படும் காற்றழுத்தத்தால் இயங்கும் துப்பாக்கி, இரண்டு வாள்களும் கைப்பற்றப்பட்டன.

இவர் மேலதிக விசாரணைகளுக்காக தெமட்டகொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கிங்ஸ்பெரி மற்றும் சினமன் கிராண்ட் விடுதிகளில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்களான இன்ஷாப் அஹமட் மற்றும் இல்ஹாம் அஹமட் ஆகியோரின் மூத்த சகோதரரே இவராவார்

இவர்களின் தந்தையான வர்த்தகர் மொஹமட் இப்ராஹிம், ஏற்கனவே தெமட்டகொடவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த வீட்டில் இருந்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இவருக்கு 6 ஆண்கள் உள்ளிட்ட 9 குழந்தைகள் உள்ளனர்.

இவருடன் ஏற்கனவே, இரண்டு மகன்மார் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது மகனும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மற்றொரு மகனைக் கைதுசெய்வதற்கு தேடுதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *