சாய்ந்தமருது சம்பவத்துக்கும் பொறுப்பேற்றது ஐ.எஸ்.ஐ.எஸ்.!

அம்பாறை மாவட்டம், கல்முனை – சாய்ந்தமருதில் பொலிஸாருடன் நடந்த மோதலில் தமது உறுப்பினர்கள் 3 பேர் தற்கொலைத் தாக்குதல் நடத்தி உயிரிழந்துள்ளனர் என்று சர்வதேச தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். அறிவித்துள்ளது.

அபு ஹமீட், அபு சுஃபியான், அபு அல் ஹஃகா ஆகிய தமது இயக்க உறுப்பினர்கள் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர் என்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். தெரிவித்துள்ளது.

சாய்ந்தமருது தற்கொலைதாரிகளில் ஒருவரான ரில்வான், தனது சகோதரரான – உயிர்த்த ஞாயிறு தினமன்று கொழும்பில் தற்கொலைத் தாக்குதல் நடத்தி உயிரிழந்த தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் சஹ்ரானுடன் துப்பாக்கியுடன் நிற்கும் படமும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியையும் படத்தையும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் செய்திப் பிரிவான ‘அமாக்’ வெளியிட்டுள்ளது.

இதேவேளை, தமது உறுப்பினர்களின் தாக்குதலில் இலங்கைப் பொலிஸார் உட்பட 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் அறிவித்துள்ளது.

எனினும், சாய்ந்தமருது சம்பவத்தில் பாதுகாப்புத் தரப்பினர் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும், தற்கொலைதாரிகளும் அவர்களுடன் வீட்டில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் என 15 பேர் இதன்போது உயிரிழந்தனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர நேற்றுத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *