ஜனாதிபதி வேட்பாளராக களத்தில் குதிக்கத் தயார்! – சபாநாயகர் கரு அதிரடி அறிவிப்பு
“மக்கள் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவது தொடர்பில் பரிசீலிப்பதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.”
– இவ்வாறு சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
மலர்ந்துள்ள தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை இன்று (20) சந்தித்து ஆசிபெற்றார் சபாநாயகர்.
அதன்பின்னர், ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஊடகவியலாளர் ஒருவர், சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினார்.
இந்தச் சந்திப்பின் பின்னர் ‘ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் உங்கள் பெயரும் அடிபடுகின்றது. எனவே, தேர்தலில் போட்டியிடுவீர்களா?’ என ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த கரு ஜயசூரிய,
“எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நான் பதவியைத் தேடிச் சென்றதில்லை. வழங்கப்படும் பதவியை சிறப்பாக செய்வதே எனது நோக்கமாகும்.
பொதுமக்கள், ஓரணியில் திரண்டு கோரிக்கை விடுப்பார்களாயின், அந்தக் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்யலாம்.
அடுத்த வருடம் நாட்டு மக்களுக்கு மிகவும் சவாலான ஆண்டாக இருக்கும். விசேடமாக பல தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன.
எதிர்காலத்தில் எனக்குப் பொறுப்பொன்று வழங்கும் சந்தர்ப்பம் வந்தால் நாட்டில் நீதி மற்றும் நியாயத்தை ஏற்படுத்துவதற்குத்தான் அந்தப் பொறுப்பை ஏற்பேன்” – என்றார்.