பதவிக்காலம் தொடர்பில் உயர்நீதிமன்றை நாடினால் மூக்குடைபட வேண்டிவரும்! – மைத்திரிக்கு சுமந்திரன் அறிவுரை
“பதவிக்காலம் குறித்து மீண்டும் உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி தரப்பு அபிப்பிராயம் கேட்க முயலுமாயின் அது சுத்தபைத்தியக்காரத்தனமான நடவடிக்கையாகவே இருக்கும்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் எப்போது முடிவடையும் என்பதை உயர்நீதிமன்றத்திடம் வினவ ஜனாதிபதி தரப்பு முஸ்தீபுகளை எடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்திருப்பது குறித்து சுமந்திரன் எம்.பியிடம் ‘தமிழன்’ செய்திச் சேவை இன்று புதன்கிழமை வினவியபோது அவர் மேலும் கூறியதாவது:-
“ஏற்கனவே உயர்நீதிமன்றத்திடம் இதுபற்றி ஜனாதிபதி வினவினார். அதற்கு உரிய பதிலை உயர்நீதிமன்றம் வழங்கிவிட்டது. அதன்படி தேர்தல் ஆணைக்குழு உரிய நேரத்தில் தேர்தலை அறிவிக்கும்.
அப்படியான நிலையில் மீண்டும் உயர்நீதிமன்றத்திடம் அபிப்பிராயம் கேட்பதென்பது அறிவிலித்தனமானது. முன்னர் சொன்னதை மீண்டும் கேட்க வேண்டுமா? 2015 ஜனவரி 9 ஆம் திகதி அவரது பதவிக்காலம் ஆரம்பிக்கின்றது. ஆறு வருடத்துக்குத் தெரிவான மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் மட்டுப்படுத்தப்பட்டு ஐந்து வருடமாக குறைக்கப்பட்டுள்ளது.
இது அடுத்த ஜனாதிபதிக்கா என்ற கேள்விக்கே இடமில்லை. என்னைப் பொறுத்தவரை மீண்டும் உயர்நீதிமன்றத்திடம் சென்று மூக்குடைபடும் செயற்பாடாகவே இது இருக்கப் போகின்றது” – என்றார்.