பதவிக்காலம் குறித்து விளக்கம் கோர உயர்நீதிமன்றத்தை நாடுகிறார் மைத்திரி!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலம் எப்போது முடிவடைகின்றது என்று உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரவுள்ளார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“2015 ஜூன் 21ஆம் திகதி சபாநாயகரினால் கையெழுத்திடப்பட்ட, 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைய ஜனாதிபதியின் பதவிக்காலம், ஐந்து ஆண்டுகளில் முடிவடைகின்றது.
எனவே, 19 ஆவது திருத்தச்சட்டம் 2015 ஜூன் 21ஆம் திகதி நடைமுறைக்கு வந்த அன்றில் இருந்தே, ஜனாதிபதியின் ஐந்து ஆண்டு பதவிக்காலம் கணக்கிடப்பட வேண்டும்.
இதன்படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 2020 ஜனவரி 08ஆம் திகதி வரை பதவியில் இருப்பதற்குப் பதிலாக, 2020 ஜூன் 20 வரை பதவியில் இருக்க முடியும்.
மிகவும் உணர்வுபூர்வமான இந்த விவகாரம் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏன் உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தைக் கோரக் கூடாது? இதுபற்றி நாங்கள் எமது சட்டவல்லுநர்களுடன் ஆராய்ந்து வருகின்றோம்.
2015 ஜூன் 20 வரை ஜனாதிபதியின் ஐந்தாண்டு பதவிக்காலம் வரையறுக்கப்பட்டால், நாடாளுமன்றத்தை நான்கரை ஆண்டுகளில் கலைக்கின்ற அதிகாரம், ஜனாதிபதிக்கு அந்தக் காலப்பகுதியில் கிடைக்கும்.
எனவே, 2020 பெப்ரவரியில் அவர் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வாய்ப்பு உள்ளது” – என்றார்.