பரபரப்புக்கு மத்தியில் வெள்ளி நாடு திரும்புகின்றார் கோட்டா!
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடு திரும்பவுள்ளார்.
கலிபோர்னியாவில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்த கோட்டாபய ராஜபக்ச, அங்கு வாழும் இலங்கை மக்களையும் சந்தித்து சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.
கோட்டாபய ராஜபக்ச தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ள நிலையில், அவருக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக அவருக்கு நேற்றிரவு எழுத்துமூல அறிவிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. எனினும், இதனால் கோட்டாபய ராஜபக்சவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என மஹிந்த அணி இன்று தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே எதிர்வரும் வெள்ளியன்று கோட்டாபய நாடு திரும்புகிறார் என அறியமுடிகின்றது.
அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் எனக் கருதப்படும் கோட்டாய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையைத் துறக்கும் ஆவணங்களை கடந்த 6ஆம் திகதி அமெரிக்கத் தூதரகத்தில் கையளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.