இறந்து 25 வருடங்களுக்குப் பின் யாழ்ப்பாணத்துக்கு வந்த உடல்!

இத்தாலி நாட்டில் இறந்த யாழ்ப்பாணம் – சாவகச்சேரியைச் சேர்ந்தவரின் உடல் சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு அவரது சொந்த ஊருக்கு இன்று (07) அதிகாலை எடுத்துவரப்பட்டுள்ளது.

தென்மராட்சி – சாவகச்சேரியைச் சேர்ந்த எம்.ஸ்டீபன் யோர்ஜ் என்பவர் இத்தாலி நாட்டில் தொழில் புரிந்து வந்துள்ளார். இந்நிலையில், நோய்வாய்ப்பட்ட ஸ்டீபன் 24.05.1994 அன்று அவருடைய 49 வது வயதில் இத்தாலியில் மரணமடைந்துள்ளார்.

அப்போது இலங்கையில் போர் தீவிரமாக இடம்பெற்றுக் கொண்டிருந்தமையால் இறந்தவரின் உடலை இலங்கைக்குக் கொண்டுவரமுடியாத காரணத்தினாலும், போர் எப்போது முடிவடையும் என்று தெரியாத காரணத்தினாலும் இத்தாலியில் இருந்த உறவினர்கள் 25 வருடங்களுக்கு உடலினைப் பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில் நாட்டில் யுத்தம் நிறைவுக்கு வந்தாலும், 25 வருடங்கள் நிறைவடையாமல் உடலினைப் பொறுப்பேற்பதில் சிக்கல்கள் ஏற்பட்டன. இதனால் இறந்தவரின் மனைவி இத்தாலி நாட்டுக்குச் சென்று கணவரின் உடலினைப் பார்வையிட்டு வந்திருந்தார்.

25 வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் இறந்தவரின் உடல் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் எடுத்துவரப்பட்டு சாவகச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

– சாவகச்சேரி நிருபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *